அலுவலகத்தில் ஆணிகளை அதிகமாக பிடுங்கி களைத்தனால், உல்லாச பயணம் செல்ல முடிவானது. நால்வர் கொண்ட குழு ரெடி. ஆனால் எங்கே செல்வது? அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்த இடம் 'விசாகபட்டணம்'. வெள்ளிகிழமை வரும் தெலுங்கு வருட பி்றப்பு விடுமுறையை மனதில் கொண்டு எங்களின் பயண திட்டம் உருவானது (இதெல்லாம் கரெக்டா பிளான் பண்ணு; ஆனா வேலை மட்டும் செய்யாதே!!).
தெலுங்கு வருட பி்றப்பன்று நாங்கள் விசாகபட்டணத்தில் காலடி பதித்தோம். ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு ஆட்டோ ஓட்டுனர் எங்களிடம் வந்தார். நாங்கள் எவ்வளவு மறுத்தும் எங்களை விட்டு அகலவில்லை ( அதான் எங்களின் முகத்தி்ல தமிழன்னு எழுதி ஒட்டியிருக்கே!! ). எங்களுக்கும் எங்கே செல்வது, தங்குவது என ஒரு திட்டமும் கிடையாது. வேறுவழி இன்றி அந்த ஆட்டோ ஓட்டுநரை பின்பற்றினோம் :-). ஒருவழியாக குறைந்த செலவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் வாடகைக்கு எடுத்தோம். Dabagardens பகுதியில் நிறைய ஹோட்டல்கள் உள்ளன.
காலையில் ஒரு மகிழ்வுந்து வண்டியை நாள் வாடகைக்கு ஏற்பாடு செய்துகொண்டோம். ரூ் 1500 வாடகையிலிருந்து, நாள் வாடகை ரூ் 700 எனவும், மலையில் பயணம் செய்ய ரூ் 100 எனவும் பேரம் பேசி முடித்தோம். முதலில் நாங்கள் சென்ற இடம் சிம்மாசலம் கோவில். கடவுள் வழிபாடு செய்துவிட்டுத்தான் எங்கள் பயணத்தை தொடங்க வேண்டுமென்று முன்னரே முடிவு செய்திருந்தோம் (அட்றா சக்கை.. அட்றா சக்கை...).
Simhachalam - The hill of the lion
அரை மணி நேரத்தில் சிம்மாசலம் அடைத்தோம். முலவர் வராக லக்ஷ்மிநரசிம்மர். விக்கிரகம் பார்ப்பதற்கு சிவலிங்கத்தின் மீது மஞ்சள் தடவியதுபோல் இருக்கிறது. கோவிலின் கட்டிடக்கலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், கோனார்க் கோவிலை போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு கோவில்களை போலில்லாமல், கோவிலின் தூண்கள் வட்ட வடிவில் உள்ளன. அங்கே வித்தியசாமான ஒருவகை வேண்டுதலை பார்த்தோம். பக்தர் தங்களை தூணில் ஒரு துண்டு துணியால் கட்டிகொண்டு, பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததனால், அரை மணி நேரத்தில் வழிபாட்டை முடித்து வெளியே வந்தோம்.
Kailasagiri - Hill top park
ஒருபுறம் பசுமை நி்றைந்த மலை; கடல் மறுபுறம்; அதுதான் கைலாசகிரி. மலைமீது சிவன் பார்வதி தம்பதியர் சகிதம் வீற்றிருக்கிறார்கள். சிறார்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பிக்னிக் ஸ்பாட் ( அங்கே உனக்கு என்னடா வேலை என நீங்கள் கேட்பது புரிகிறது ). ஏழு அழகிய வியூபாயிண்ட்கள் உள்ளன. ரோப் கார் காரில் அமர்ந்து நகரை பார்ப்பது இனிமையான அனுபவம். ஒரு ஆளுக்கு ரூ் 55 கட்டணம்.
கைலாசகிரியை வலம் வர ரோடு ட்ரைன் உள்ளது.
Rushikonda beach - Sugar loaf hill
கைலாசகிரி அடுத்து நாங்கள் சென்ற இடம் ருஷிகொண்டா கடற்கரை. குளிப்பதற்கு ஏற்ற இடம். அலைகள் அவ்வளவாக இல்லை. விளையாட பந்து கொண்டு செல்வது நலம். ஆளுக்கு ரூ் 50 கொடுத்து மோட்டார் படகில் சவாரி செய்தோம். சிறிது தூரம் வரை கடலில் கொண்டு சென்று, பிறகு கரைக்கு திரும்பிவிடுகிறார்கள். லைப் ஜாக்கெட் தருவதினால் பயப்பட வேணாம்.
நகர் வலம் தொடரும் ...
Quote : ″A traveler without observation is a bird without wings.” - Moslih Eddin
Friday, April 3, 2009
Subscribe to:
Posts (Atom)